பெங்களூர் இடிகள்!


Image

பெங்களூரு – மெத்தப் படித்திருக்கும் இளைஞர்களின் (குறிப்பாக தமிழ் இளைஞர்கள்) கனவு நகரம்.

பெங்களூருக்கு வந்து ஒரு வருசத்துக்கும் மேல ஆகிப்போச்சு. இதையெல்லாம் வாழ்க்கையில பாப்போமான்னு கனவுல மட்டுமே நினைச்சுட்டு இருந்த பல விஷயங்களை  எல்லாம் சலிக்க சலிக்கப் படம் போட்டுக் காட்டுன இந்த  ஊரைப் பத்தி ஏதாவது எழுதணும்ன்னு தோணுச்சு.அதோட விளைவு தான் இந்தப் பதிவு.

சரி! இனி பதிவுக்குள் …

ஓசூர்!

இந்த ஊரைக் கிராஸ் பண்ணும்போதே வயித்துல லைட்டா பட்டாம் பூச்சி பறக்கும்! (புது ஊரு,தெரியாத அட்ரெஸ்சை எப்படி டா கண்டுபுக்கப் போறோமுங்குற வவுத்து கலக்கல்ன்னு கூட சொல்லலாம்!) அடுத்த ஒரு மணி நேரத்துல பெங்களூரு!

வந்த புதிதில் எல்லாமே இடிகளாகத்தான் உச்சி மண்டையில் இறங்கும். சில இடிகள் அதிர்ச்சியானவை,சில இடிகள் சுவாரசியமும் ஆர்வம் கூட்டுபவையாவும் இருக்கும்.அவ்விடிகளை ஒவ்வொன்றாய் வரிசைப்படுத்துகிறேன்!

இடி – 1 : மடிவாலா,மடிவாலான்னு கண்டக்டர் பொடியன் சத்தம் போடும்போதே உசாரா எந்திரிச்சு உக்காந்துக்கணும்.இல்லனா அம்புட்டுதேன்..
 பெங்களூருக்கு புதுசா வர்ற நம்ம பயலுகளுக்கு உச்சந்தலையில மொதோ இடியை இறக்குறது இந்த ஆட்டோக்காரவிங்கதான்! என்பது மீட்டர் தூரம் கூட ஆகாத அட்ரஸ்சுக்கு என்பது ரூவா கேட்டு அவன் பர்சுல வெடியை வெப்பாணுக.வேற வழியில்லாம அதுல ஏறிப்போயி,ஒரு வழியா அட்ரெஸ்சைக் கண்டுபுடிச்சி போய் சேர்ந்துடுவாணுக.

இடி – 2 : இத்தனை நாளா,நம்ம ஊருல சரவண பவன்,மாமி மெஸ்,
,முக்குல இருக்க தள்ளுவண்டிக் கடைகள்ல ரெண்டு இட்டிலிக்கு மூணு லிட்டர் சாம்பாரைக் குடிச்சுப் பழகியிருக்கலாம்.ஆனா,பெங்களூர் வந்ததும் நீங்க  வெறுக்குற முதல் விஷயம் சாம்பாராத்தான் இருக்கும்.எப்படித்தான் இப்படி சாம்பாரை வைக்குறாய்ங்களோ தெரியல.(அந்த சாம்பாரையும் விடாம ஒருத்தன் வளைச்சுக் கட்டி அடிச்சா அவன் “கன்னடிகா” என்றறிக).

இடி – 3 : பஸ்ஸு போர்டை பாத்ததுமே வயித்தைக் கலக்கிரும்.போர்டுல என்னத்தை எழுதிருக்காய்ங்கன்னே தெரியாது.எல்லாம் நம்பரை வெச்சுதான் கண்டுபுடிசுக்கணும்.(இவ்விடத்தில் கன்னடர்களின் மொழிப்பற்றை வியந்தாக வேண்டும். பெரும்பாலான பேருந்தின் பலகைகளில் கன்னடத்தில் மட்டுமே எழுதியிருக்கிறார்கள்) டிக்கெட் ரேட்டுகளைப் பத்தி பேச எல்லாம் நமக்கு வக்கில்ல.சோ, அதை ஸ்கிப் பண்ணிடலாம்.

இடி – 4 : ஸ்லீவ்லெஸ் சுடிதாரைப் பாத்தாலே “டங்க்ஸ்ட்டன்” ஆகி பழகிப்போன நாம,பெங்களூர் பொண்ணுகளோட ட்ரெஸ் கோடுகளுக்கு(Dress Codes) செட் ஆக ரொம்ப நாளாகும்.லாஸ் ஆப் பே’ல (Loss of pay)லீவெல்லாம் போட்டு இதுக்குன்னே, எம்.ஜி ரோடு,கமர்சியல் ஸ்ட்ரீட்டு,மந்த்ரி மால், சென்ட்ரல், போரம்’ன்னு போயிட்டு வருவாய்ங்க!

இடி – 5 : மொழிப் பிரச்சினை .. அது இல்லாமலா?”கன்னடம்”…. தக்காளி,சைனீஸ் மொழியைக்கூட பேசி படிச்சு பழகிப் புடலாம் போல.ஆனா,கன்னடம் ம்ம்ஹூம். சாதரணமா, பஸ்ல கண்டக்டர் பேசுற கன்னடம் உங்களுக்கு புரிஞ்சிட்டாலே நீங்க பெரிய ஆளுதான்.

 

                                                                  Image

இடி – 6 : குடும்பத்தோட கல்லை கட்டிக்கிட்டு கிணத்துக்குள்ள கூட குதிச்சுடுங்க.ஆனா,இந்த ஊரு பார்க்குகளுக்கு மட்டும் புள்ளை குட்டிகளோட போக ப்ளான் போட்டுடாதீங்க.பெரும்பாலான இன்ஸ்டன்ட் காதல்களின் (Instant love) விரக தாபத்தை தீர்க்கும் படுக்கை அறைகளாக அவை மாறிப்போய்  எப்போதோ புண்ணியம் தேடிக்கொண்டுவிட்டன.

இடி – 7 : பார்க்குகள்ல தான் அந்த அக்கப்போரு பண்ணுறாய்ங்கன்னா, எட்டு மணிக்கு மேல எந்த சந்துக்குள்ளையும் போக முடியாது! எல்லாம் செட்டு செட்டா நின்னு ரொமான்ஸ் பண்ணிட்டு இருப்பாய்ங்க.நம்ம பய இப்படி சீனை எல்லாம் மலையாள பிட்டுப் படத்துல மட்டுமே பாத்திருப்பான்.அந்த ஆர்வத்துல கொஞ்சம் எசகு பிசகா அவிங்களா என்னமாது (!!!) பண்ணிட்டா அம்புட்டுதான்,அந்தப்பையன் கூட கண்டுக்காம “காரியமே கர்ம்மமாக” இருப்பான்,ஆனா,அந்தப் புள்ளை சும்மா விடுமா? கன்னா பின்னான்னு கத்தி விட்டுரும்.அது என்ன மொழின்னு கண்டுபுடிக்கவே நமக்கு நாப்பது நாள் ஆகும்,என்ன திட்டுனான்னு புரிஞ்சு போயி கடுப்பாகி பத்து நாள் கழிச்சு,அதே இடத்துக்கு அவளைத் தேடிப்போனா அதே பொண்ணு,வேற பையனோட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கும்… அங்க டென்சன் ஆகாம யதார்த்தத்தை புரிஞ்சிகிட்டா,அங்கேயே நீங்க பாதி பெங்களூர்வாசி ஆகிட்டீங்கன்னு அர்த்தம்..

 இடி – 8 : கொஞ்சம் வெள்ளையா இருந்துட்டா போதும்(அவ்வ்வ்வவ்வ்வ்வ்…. :( ),அவிங்களே நம்மளை வடநாட்டுக்காரன்னு முடிவு பண்ணிருவாய்ங்க. வர்ற புதுசுல, பல “கித்துனா பனானா ஹை” களை கடக்க வேண்டியிருக்கும்.

இடி – 9 : ஒரு சில புள்ளைகளைப் பாத்தா, உங்களுக்கு எண்ணத்தா இம்பூட்டு வறுமைன்னு வாயை விட்டே கேட்டுடலாம் போல இருக்கும்? அப்படித்தான் கிழிச்சு விட்டு சுத்துமுங்க. அதுலயும் ஒரு சில வட நாட்டுப் புள்ளைய நாலு படி மேல போயி,நம்ம ராஜ்கிரண் மாதிரி டவுசரை மாட்டிகிட்டு டவ் சோப்பு (Dove soap) வாங்க வந்து நம்ம டவுசரைக் கழட்டிருவாளுக. நம்ம ஊரு புள்ளைகளை கேக்கவா வேணும்? ஸ்ஸ்ஸ்சப்பா..உங்க வீட்டு அலும்பா எங்க வீட்டு அலும்பா?!?!.. ஊருல  இருந்தப்ப ஓட்டைக் கண்ணாடியும் இந்திரா காந்தி சுடிதாரையும் மாட்டிகிட்டு திரிஞ்சதுக இங்க வந்ததும், பாஸ்ட் ட்ராக் கண்ணாடி(Fast track coolers),டைட்ஸ் டி-சர்ட்,தெறிக்கிற மாதிரி ஜீன்சுன்னு அலப்பறை பண்ணி அல்லையை கட்ட விடுதுங்க. பயலுகளும் சளைச்சவனுக இல்ல! நண்பன் பலராமனோட இந்த ஒரு பதிவு போதும்.அவிங்களைப் பத்தி தெரிஞ்சிக்க!

இடி – 10 :  M.E கெமிக்கல் இன்ஜீனியரிங்கே படிச்சிருந்தாலும் நமக்கென்னவோ தமிழையும்,இங்கிலீசையும் தவிர்த்து வேற ஏதாவது மொழினா வேர்த்துக் கொட்ட ஆரம்பிச்சிடும்.ஆனா,நாம தங்கியிருக்க பிளாட் ஓனரு மூணாவது பெயில் ஆகியிருப்பாரு.ஆனா, அழிஞ்சு போன ஹீப்ரு மொழியைத் தவிர எல்லாத்தையும் அவரு சரளமா பேசுறதைப் பாத்து நமக்கு பேக்குல/பிரன்ட்டுல எல்லாம் பயர் ஆகும். கேரட் ஜூஸ் குடிச்சு ஆத்திக்கணும்…

இடி – 11 : பஸ் ஸ்டாப்பு , டீக்கடைன்னு பொண்ணுங்க எல்லா இடத்துலையும் பசங்களுக்கு போட்டியா நின்னு தம் அடிக்குங்க.அதை, வாயைப் பொளந்துகிட்டு  ஆச்சரியமாப் பாத்தா நீங்க இன்னும் பக்குவப் படலைன்னு அர்த்தம்.

இடி – 12 : பொட்டிக்  கடையில கடலை  மிட்டாயோ,முறுக்கோ  வாங்கப் போறதை மத்தவங்க பாத்துருவாங்களோன்னு நீங்க  பயந்து நின்னுட்டு இருக்க அதே சமயத்துல, பதினெட்டு வயசுப் பையன் ஒருத்தன் உங்க முன்னாடியே அதே பொட்டிக் கடையில காண்டம்(Condom) வாங்கிட்டுப் போவான்… நீங்க காண்டாகாம இருக்கணும்.

கொசுறு : எல்லாத்துக்கும் மேல பெங்களூர் வந்ததும் கந்து வட்டிக்காவது கடனை வாங்கி  முதல் காரியமா நீங்க செய்ய வேண்டியது ரெண்டு விஷயம் இருக்கு.முதலாவது ஒரு ஜெர்க்இன்(Jerkins) வாங்குறது,ரெண்டாவது ஒரு பிளாக் கலர் கூலர்(Cooling Glass) வாங்குறது.முன்னது,பெங்களூர் குளிருக்கு,பின்னது,இந்த ஊர் பொண்ணுகளுக்கு.நீங்க யார் யாரையெல்லாம் எங்கெங்க பாக்குறீங்கன்னு யாருக்கும் தெரிஞ்சிடக்கூடாதுல்ல அதுக்குத்தான்.. :P இது ரொம்ப முக்கியமுங்க! ஏன்னா பெங்களூர் தான்  பெண்களூர் ஆச்சே!! ;-)

 

இடி இன்னும் விழும்!

                                

மூன்று முடிச்சு – ரஜினி படமல்ல – தொடர் பதிவு


நெடு நாட்களுக்கு பின் நான் போடும் பதிவு இது. எனது முதல் தொடர்பதிவும் கூட.இந்த புதுமாதிரியான பதிவினை  அறிமுகப்படுத்திய அண்ணன் முரளிக்கண்ணன் அவர்களுக்கு நன்றி.

விரும்பும் விஷயம்:

1.அம்மா

2.இயற்கை எழில் சூழ்ந்த இடங்கள்
3.ஐ-போன்

விரும்பாத விஷயம்

1.புகை/குடிப்பழக்கம்

2.”எனக்கு தெரியாதது எதுவும் இல்லை” என்னும் தொனியில் பேசும் நபர்கள்.

3.கைபேசியில் வரும் விளம்பர அழைப்புகள்.

பயப்படும் விஷயம்:

1.அப்பா
2.காதல்
3.கொசு

புரியாத விஷயம்:

1.மனிதர்கள்
2.கணக்கு பாடம்(சிறுவயது முதலே)
3.கல்லூரியில் பேராசிரியராக ஆகியிருக்க வேண்டிய நான்,கணிப்பொறியாளன் ஆனதெப்படி என்பது.

மேஜையில்(அலுவலக )
உள்ள பொருள் :

1.கணிப்பொறி
2.கைபேசி
3.எழுதுகோல்

சிரிக்க வைக்கும் விஷயம்/மனிதர்கள்:

1.என்றும் வடிவேலு
2.கிளையன்ட்களிடம் புராஜெக்ட் மேனேஜர்கள் படும் பாட்டை கண்டு(மனதுக்குள் சத்தமாக) சிரிப்பதுண்டு!
3.சில சமயஙளில் என்னை நொந்து கொண்டு தனியாக..

தற்போது செய்து கொண்டு இருக்கும் காரியம்:

1.ஐ.டி துறையில் கணிப்பொறியாளனாக‌ பணி .
2.சென்னையில் நிலம் வாங்க பணம் சேர்த்துக்கொண்டிருப்பது.
3.யோகா கற்றுக்கொண்டிருக்கிறேன்.
வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்:

1.குறைந்தது 20 கிராமத்து ஏழை இளைஞர்களுக்காவது வேலை வாய்ப்பை ஏற்ப்படுத்தி தருவது .

2.பெங்களூரில் வீடு வாங்குவது.

3.  லண்டன் நகரை பார்க்க விரும்புவது.

உங்களால் செய்து முடிக்கக் கூடிய விஷயம்:

என்னை முழுதாய் நம்பி என்னிடம் ஒப்படைக்கப்படும் அனைத்து வேலைகளும் ..

கேட்க விரும்பாத விஷயம்:

1.மேற்க்கத்திய பாடல்கள்
2.கடன்
3.சோகக்கதைகள்

கற்றுக் கொள்ள விரும்பும் விஷயம்:

1.சீன மொழி
2.நடனம்
3.வானசாஸ்திரம்

பிடிச்ச உணவு வகை?

1.அனைத்து சிக்கன் வகை உணவுகளும்
2.பழைய சாதம் வித் கருவாட்டு வெங்காய கூட்டு
3.ரசம் சாதம் வித் நண்டு கூட்டு

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்

1.காதல் வந்தால் சொல்லியனுப்பு(இயற்கை)
2.யாராது.. யாராது.. (காவலன்)
3.யாத்தே யாத்தே (ஆடுகளம்)

பிடித்த படம்:

1.காதலுக்கு மரியாதை
2.சேது
3.3இடியட்ஸ்

இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான விஷயம்:

1.பணம்
2.அன்பு
3.ஆற்றல் வாய்ந்த அறிவு.

இந்த தொடர் பதிவை நண்பர்கள் பலராமன் உடன்பிறப்பே (ரவிசங்கர்) மற்றும் ரியாஸ் தொடர்வார்கள்.

ஜூலியஸ் சீஸர் படுகொலை!


“சீசரைக் கொல்லத் திட்டமிட்டவர்கள் ஒருபோதும் ஒரே சமயத்தில் சந்தித்துக் கொள்ளவில்லை”


கி.மு. 49ம் ஆண்டு, ஜூலியஸ் சீசர் மேற்கு இத்தாலியிலுள்ள ரூபிகான் நதியைக் கடந்து ரோமன் குடியரசில் ஒரு உள்நாட்டுப் போரை ஏற்படுத்தினார். ஜூலியஸ் சீசரின் பரம எதிரி பாம்ப்பே கிரீசுக்குத் தப்பிச் சென்றார். மூன்றே மாதங்களிலில் இத்தாலிய தீபகற்பம் முழுவதையும் சீசர் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். ஸ்பெயின் நாட்டில் பாம்ப்பேய்க்கு ஆதரவாயிருந்தவர்களையும் வென்றார். பின்னும் விடாமல் பாம்ப்பேயை கிரீசுக்குத் துரத்திச் சென்றார். ஆனால் பாம்ப்பே அதற்குள் எகிப்திற்குத் தப்பிச் சென்றுவிட்டார். அவரை எகிப்திற்குத் தொடர்ந்த சீசருக்கு பாம்ப்பேயின் வெட்டப்பட்ட தலை நட்பின் பரிசாக அளிக்கப்பட்டது.

எகிப்திலிருந்து திரும்புவதற்கு முன்னால் சீசர் கிளியோபட்ராவை தன் சார்பில் எகிப்தின் அரசியாக நியமித்தார். வட ஆப்பிரிக்காவில் இருந்த தன் மற்ற எதிரிகளை வென்ற பின்னர், கி.மு. 47ம் ஆண்டு தனது ஆட்சியை முழுமையாக நிலைநிறுத்திய மனநிறைவுடன் ரோமிற்குத் திரும்பினார். ஆனால் சீசர் அதனுடன் நிற்கவில்லை. கி.மு. 44ம் ஆண்டு வரை தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போரிட்டு வந்தார். அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தன்னை வாழ்நாள் சர்வாதிகாரியாகப் பிரகடனம் செய்தார். அவரது இந்தச் செயலும் அதிகார ஆணவமும் அவரது அரசவையில் இருந்தவர்களை அவர் மீது வெறுப்படைய வைத்தன. அவரது அரசவையிலிருந்த அறுபது உறுப்பினர்கள் சீசரின் சர்வாதிகாரத்தை ஒழிக்க ஒரே வழி அவரைக் கொல்வதுதான் என்று தீர்மானித்தார்கள்.

டமாஸ்கசைச் சேர்ந்த நிக்கோலஸ் என்பவர் சீசரது மரணத்தைப் பற்றி விரிவாக விளக்குகிறார். அவர் சீசர் கொல்லப்பட்டதை நேரில் பார்க்காவிட்டாலும் அந்த நிகழ்ச்சியின்போது இருந்தவர்களை சந்தித்துப் பேசும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது.


சீசரைக் கொல்லத் திட்டமிட்டவர்கள் ஒருபோதும் ஒரே சமயத்தில் சந்தித்துக் கொள்ளவில்லை. யாராவது ஒருவர் வீட்டில் சிலர் கூடிப் பேசுவார்கள். நிறையத் திட்டங்கள் அலசப்பட்டன; எப்படி, எங்கே சீசரைத் தீர்த்துக் கட்டுவது என்று. சிலர் சீசர் எப்போதும் நடந்து செல்லும் புனித வழி எனும் பாதையில் அவரை மடக்கிக் கொன்றுவிடலாமென்று கூறினர். இன்னொரு யோசனை சீசரைத் தேர்தலின் போது கொன்று விடுவது என்பது. அந்த சமயத்தில் சீசர் தேர்தலுக்கான மாஜிஸ்ட்ரேட்டுகளை நியமிப்பதற்காகப் பாலத்தைக் கடந்து செல்வார். அது சரியான தருணமாக இருக்கும் என்பது அவர்கள் கணக்கு. யார் பாலத்திலிருந்து சீசரைக் கீழே தள்ளுவது, யார் அவரைக் கொல்வது என சீட்டுப் போட்டுப் பார்க்க வேண்டும் என்றார்கள். அடுத்த யோசனை கத்திச் சண்டை போட்டி நடக்கும்போது அவரைத் தீர்த்துக் கட்டிவிடலாம் என்பது. அந்த சமயத்தில் கத்தியுடன் யார் சென்றாலும் சந்தேகப்பட மாட்டார்கள் என்பது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் பெரும்பாலானோர் சீசரை அரசவையில் வைத்துக் கொன்றுவிட வேண்டுமென்று விரும்பினார்கள். அப்போது உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். கத்திகளை மறைத்து வைப்பது சுலபம் என்பது அவர்கள் எண்ணம். கூடியிருந்தவர்களில் பெரும்பாலானோர் இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

ஜூலியஸ் சீசரின் நெருக்கமான நண்பர்களுக்கு அவரைக் கொல்வதற்கான திட்டங்கள் பற்றி வதந்திகள் கசிந்து வந்தன. அவர்கள் சீசர் அரசவைக்கு வர வேண்டாம் என்று கருத்து தெரிவித்தார்கள். சீசரது மருத்துவர்களும் சீசரின் உடல் நிலையைக் கருதி அவர் அன்று அரசவை செல்ல வேண்டாம் என்றார்கள். அவரது மனைவி கல்பூரினா சில நாட்களாகக் கெட்ட கனவுகள் கண்டிருந்ததால் தன் கணவருக்கு ஆபத்து வருமோ எனக் கலங்கியிருந்தாள். இந்த நிலையில் அவளும் கணவன் அரசவை செல்வதை விரும்பவில்லை.

ஆனால், நண்பனைப் போல் உடனிருந்து சீசரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தவர்களில் முதல்வனான ப்ரூடஸ், சீசரிடம் ”இது என்ன பைத்தியக்காரத்தனம்! ஒரு பெண் கண்ட அர்த்தமில்லாத கனவுகளையும் சில அறிவில்லாதவர்களின் வார்த்தைகளையும் கேட்டு அவைக்கு செல்லாதிருக்கலாமா? இது அவைக்கு நீங்கள் செய்யும் அவமானமில்லையா? நான் சொல்வதைக் கேளுங்கள். யார் யாரோ சொல்வதைக் கேட்டு அவைக்கு வராமலிருக்க வேண்டாம்” என்றான். ப்ரூடஸ் சொன்னதைக் கேட்டு மனம் மாறிய சீசர் அவைக்குச் செல்ல நினைத்தார்.

சீசர் அரசவை செல்லும் முன் அவரது குருமார்களும் அவருக்காக பலி ஏற்பாடு செய்தபோது ஏற்பட்ட கெட்ட சகுனங்களைக் கூறி அவரை எச்சரித்தார்கள். கெட்ட சகுனங்களால் பலி ஏற்பாட்டை மாலை வரை ஒத்தி வைத்து, மாலை வரை சீசரை அரசவைக்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்கள். சீசரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.

எங்கே தங்கள் திட்டம் வீணாகி விடுமோ என்று எண்ணிய ப்ரூடஸ் சீசரிடம் மறுபடியும் சென்று, ”யாரோ வேலையில்லாதவர்கள் உளறுவதைக் கேட்டு அரசவைக்கு வராமல் இருக்காதீர்கள். தாங்கள் கூட்டிய அரசவை தங்களுக்காகக் காத்திருக்கிறது. கெட்ட சகுனங்களையே மாற்றி நல்லவைகளாக்கும் சக்தி உங்களுக்கு இருக்கிறது. வாருங்கள்!” என்று கூறி சீசரது வலது கரத்தைப் பற்றியவாறே அவரை அரசவைக்கு அழைத்துச் சென்றான்.

கொலுமண்டபத்திற்கு வந்த சீசரை அங்கிருந்த உறுப்பினர்கள் கரகோஷத்துடன் வரவேற்றனர். அவரைக் கொல்லத் திட்டமிட்டிருந்தவர்கள் அவர் அருகில் நின்றனர். டில்லியஸ் சிம்பர் எனும் அந்த உறுப்பினர் சீசரால் நாடு கடத்தப்பட்ட தன் சகோதரனுக்காக அவரிடம் பேசும் சாக்கில் சீசரது கரங்களை அவரது மேலங்கியுடன் சேர்த்து தன் கைகளால் பிடித்துக் கொண்டார். சிம்பர் சீசரின் கரங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டதால் சீசரால் அவற்றை விடுவித்துக் கொள்ள முடியவில்லை.

சரியான தருணத்தை உணர்ந்த எதிரிகள் தாங்கள் மறைத்து வைத்திருந்த பிச்சுவாக்களை வெளியே எடுத்து சீசரை நோக்கிப் பாய்ந்தார்கள். முதலில் சர்விலஸ் காஸ்கா என்பவன் கத்தியை சீசரின் இடது தோளை நோக்கி செலுத்த முயன்றான். ஆனாலும் அந்த பரபரப்பில் அவனது குறி தவறியது. சீசர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றபோது காஸ்கா தனது சகோதரனை நோக்கிக் கத்த, அவன் சீசரின் விலாவில் கத்தியைச் செலுத்தினான். இன்னொரு உறுப்பினரான காசியஸ் லான்ஜினஸ் குத்த முயன்றபோது குறி தவறி மார்கஸ் ப்ரூடஸின் விரலில் குத்திவிட்டான். பின்னர் காசியஸ் சீசரின் முதுகிலும், புரூடஸ் அவரது இடுப்பிலும் குத்தினர். இன்னொருவன் சீசரது தொடையில் குத்த, தாக்குதல் எல்லா முனையிலிருந்தும் சரமாரியாய் நடந்தது. ஒவ்வொருவரும் சீசரது கொலையில் தங்கள் பங்கும் இருக்க வேண்டும் என்பதுபோல் தொடர்ந்து குத்தினர்.


இறுதியில் சீசர் பாம்ப்பேயின் சிலையின் கீழே காயங்களுடன் வீழ்ந்தார், உடலில் முப்பத்தைந்து கத்திக் குத்துக்களுடன். சர்வாதிகாரியாகத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்ட சீசரின் இறுதி மூச்சு பிரிந்தது.

இதாங்க தமிழ் சினிமா! பாகம்-2


இதாங்க தமிழ் சினிமா-2 !

எனது வலைப்பக்கத்தில் பட்டையை கிளப்பிய இதாங்க தமிழ் சினிமா பாகம்-1 (300க்கும் மேலான பார்வைகள்)படிக்க இங்கே சொடுக்கவும்

நம் தமிழ் சினிமாவைப் பொருத்த மட்டும் ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு தனிப்பட்ட பாணி என்று ஒன்று இருக்கும் அல்லவா? அதைப்பற்றி தான் அலசப்போகிறோம்…

வழக்கம் போல இதுவும் நகைச்சுவைக்காகத் தான்.. சிரிக்க மட்டும் என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? :)

சிங்கர் படம்:

* சொல்லவே வேணாம்! வர் படத்தை எடுக்க வர்ற தயாரிப்பாளர்,அவரோட கோவணம் முதற்க்கொண்டு எல்லாத்தையும் விற்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படலாம்! அதுக்கெல்லாம் தயாரா இருக்கணும்.

* படத்தோட Script மட்டும் 1  1/2 வருசம் எழுதுவாரு! அப்புறம் படத்தை எடுக்க ஒரு 1 1/2 வருசம்.இந்த மூணு வருசம் கழிச்சு தான் நமக்கு இவர் படத்துல யார் யார் நடிக்கிறாங்கிற தகவலே தெரிய வரும்.

* படத்துல வேலை பாக்குற தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லாம் அவங்க வீடு,வாசல்,புள்ள குட்டிங்க எல்லாத்தையும் மறந்துட்டு,டைனோசர்,எலும்புக்கூடு,ரோபாட் இதுங்க கூட தான் குடும்பம் நடத்தனும்!

* ஒரு சீன்லயாச்சும் ஹீரோவ “Puppy Shame” ல காட்டுவாரு! அப்படி இல்லனா, ஹீரோவ அப்படியே அலேக்கா தூக்கி நட்ட நடு கூவத்துல Underwear ரோட இறக்கி விட்டுடுவாரு,அதையும் தாண்டி வெளிய வந்தா ஒரு 10 பேரு நிப்பானுக,அவனுகள எல்லாம் அப்படியே சகதி சாக்கடையோட தூக்கிப் போட்டு பந்தாடனும்!

* பாவம் மனுசன்,தமிழ் சினிமா உலகத்துல ரொம்ப நல்ல பேரு வாங்கி இருந்தாரு, பூய்ஸ்’ணு  ரூட்டு மாறி ஒரு படத்தை எடுத்து தனக்குத் தாணே ஆப்பு வெச்சுக்கிட்டாரு!

மிணிரத்னம் படம்:

* இந்த சைலன்ட் கில்லர்’னு ஒன்னு கேள்விப்பட்டிருக்கோம்ல? அது வேற யாரும் இல்ல! இவரு தாங்க!

* இவரோட படம் ஓடுற தியேட்டர்’ல இருந்து யாராச்சும் சட்டைய கிழிச்சுக்கிட்டு வெளிய ஓடி வந்தா நீங்க பதறிடாதீங்க.எல்லாத்துக்கும் இவர் மனைவியோட கைவண்ணம் தான் காரணம்.. யதார்த்தமா வசனம் எழுதுரேன்னு சொல்லிக்கிட்டு இந்த அம்மா பண்னுற கரச்சல் இருக்கே, யப்பா? முடியலங்க,அங்க இங்க கைய வெச்சு கடைசியா அம்பானி குடும்பத்துக்கே ஆப்படிச்சுட்டாய்ங்க!(ராவணன் by BIG PICTURES)

* என்ன வசனம் பேசுறோம்னு அந்த வசனத்தப் பேசுற கதாபாத்திரத்துக்கே கேட்காதுங்க! அப்புறம் எங்க நமக்கு கேட்கப்போகுது! “புஸ்ஸு புஸ்ஸூ’னு” வெறும் காத்து மட்டும் வர்ற கொடுமையை கேட்க 5.1 DTS Surround Sound mixing  வேற!

* ரொம்ப திறமையான ஆளு தான்,என்னணே தெரியல படம் தான் ஓட மாட்டேங்குது! ஹி ஹி…

பெளதம் மேனன் படம்:

* இவரு இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லங்க!ஆலிவுட்டுல(Hollywood) படம் எடுக்க வேன்டிய ஆளு…அட நெஜமாத்தாங்க!

* தமிழ்’ல படம் எடுக்குறேன்னு சொல்லிட்டு படத்த ஆங்கிலத்துல எடுத்து, தமிழ்’ல “SUBTITLE” போட்டு பல பேரை கடுப்பேத்துன கனவான் இவருதாங்க! (ங்கொய்யால! வாரணம் ஆயிரம்,வண்டெலி ஆயிரம்னு படத்தோட “TITLE” வக்கனைக்கு மட்டும் கொறச்சலே இருக்காது :) )

* “Derailed” படத்தை சுட்டு பச்சைக்காக்கா முத்துச்சரம்’னு ஒரு படம் எடுத்தாரு! ஆஸ்கார் வாங்க வேண்டிய  படம்……சே! நம்மாளுக்கு just missu….

* அய்யாகிட்ட ஒரு வேண்டுகோள்..” தமிழ் படத்தை கொஞ்சம் தமிழ்’ல எடுங்க ராசா…”

தெங்கிட் பிரபு படம்:

* கதை கால் கிலோ என்ன விலை‘னு கேக்குற ஆளு இவரு!

* படத்தோட கதை என்ன’னு இவருக்கு மட்டும் இல்ல,இவரு படத்துல நடிக்கிற நடிகர்களுக்கே கூட தெரியாதுங்க!

* என்னத்தையோ எடுக்குறாரு.. நாமளும் பாக்குறோம்… படமும் ஓடிடுது..

வேலு மகேந்திரா:

* இவரு படத்துல நடிக்கிற நடிகைகளுக்கு costume செலவே இல்லங்க!

* ஒரே ஒரு சட்டை தான் … என்னது கீழயா? அதெல்லாம் கிடையாது.. அந்த சட்டைல ஒரு நாலு இன்ச் இறக்கம் வெச்சு தைச்சு கொடுத்துடுவாரு.. அவ்வளோ தான்!படம் எல்லாம் இதான் costume…

* இவர யாரச்சும் google’ல  தேடி இருக்காரானு பாத்து சொல்லுங்கப்பா???

காலா படம்:

* இவரு கொஞ்சம் வில்லங்கமான ஆளூங்க..கடவுளையே கெட்ட வார்த்தையில திட்டி வசனம் எழுதின முதல் ஆளு இவரு தான்.

* இவர் படத்துல நடிக்கிற கதாநாயகன் என்ன தான் உத்தமனா இருந்தாலும் , இவருகிட்ட வந்துட்டா கஞ்சா அடிக்கணும்,கதாநாயகிய அடிக்கணும்,சாமியாரா நடிகிற ஆள அடிக்கணும், மொட்டை அடிக்கணும்,வர்ற‌வன் போறவனை எல்லாம் அடிக்கனும்…

* வில்லங்கமா என்னத்தையாவது வெட்டிக் கொண்டு வர சொல்லுவாரு,கண்ட எடத்துல எடத்துல எல்லாம் கையை வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.. ;)

* கோவணத்தை கட்டிகிட்டு குடல் , குந்தானி எல்லாம் வாய் வழியா புடுங்கிட்டு வர்ற மாதிரி தலகீழா நிக்கனும். நான் கிடவுள்னு ஒரு படத்தை நாலு வருசமா எடுத்தாரு,அது 40 நாள் கூட ஓடல (அந்தப் படம் தேசிய விருது வாங்கினது வேற விசயம் :) )

ரூம.நாராயணன் படம்:

* உசிலம்பட்டி தாலுகா,கீரிப்பட்டி கிராமம்,வடக்குத்தெரு,7ம் நம்பர் வீட்டுல இருக்க முனியம்மாவுக்கு பிரச்சனைனா கூட அம்மனே நேரா வந்து பல Performance களைப் பண்ணி காப்பாத்தும்னு காமெடி பண்ண ஆளு இவரு

* அவனவனுக்கு மனுசங்களை வெச்சு படம் படம் எடுக்குறதுக்குள்ளவே தாவு தீர்ந்து போகுது,ஆனா இவரு யானை,குரங்கு,பாம்புனு ஒரு குட்டி அனிமல் பிளானட்டையே நடிக்க வெப்பாரு..

* என்ன ஒரு கொடுமைனா அதுங்களுக்கு எல்லாம் சட்டை, டிரவுசரை மாட்டி ஆட விட்டு கடுப்பேத்துவாரு.. அதை தான் தாங்க முடியாது! கொடுமைடா சாமி!

* இவரோட ஒரு படத்தை பாத்துட்டா போதுங்க, எல்லா படத்தையும் பாத்த மாதிரி தான்! ஏன்னா எல்லாப் படமும் ஒரே மாதிரி தான் இருக்கும்..

கமீர் படம்:

* ரொம்ப சிக்கனமான ஆளுங்க,இவரோட படத்துல நடிக்கிற ஹீரோவுக்கு ஒரே costume  தான்!

* புழுதில புரண்டு புரண்டு வில்லன்களை புரட்டி எடுக்கனும்..படத்தோட கிளைமாக்ஸ்’ல வேட்டிய‌ கிழிச்சு விட்ருவாய்ங்க.. அழுதுக்கிடே போய் மல்லாக்க படுத்து மானத்தை காப்பாத்திக்கணும்.. ;)

* நக்கல் நையாண்டிக்கு படத்துல கொறச்சலே இருக்காது..என்ன? மனுசன் படம் எடுக்குற வேலையை மட்டும் பாத்துட்டு இருந்திருக்கலாம்.

டீ.குஜய ராஜேந்தர் படம்:

* ஒரு 40 வருட  இடைவெளியால இந்தியாவோட தேசத் தந்தை பட்டத்தை இழந்து நிற்க்கும் ஒரு அப்பாவி ஜீவன் இவரு தான்.. என்னங்க புரியலையா? 1980′ல இவரு ஆரம்பிச்ச தன்னோட கலை சேவைய கொஞ்சம் 1940 வாக்குல ஆரம்பிச்சிருந்தா இவர் படத்துல பேசுற English’அ பாத்து வெள்ளைக்காரன் அப்பவே ” புடிங்கடா நீங்களும் ஓங்க சுதந்திரமும்”னு கொடுத்துட்டு ஓடியே போயிருப்பான்! so, இந்த தேசத்துக்கு  சுதந்திரம் வாங்கித் தந்த பெருமை இவருக்கு சேந்து ,இவரும் தேசத் தந்தை ஆகியிருப்பாரு! ;)

இவரோட ஆங்கில மொழிப் புலமைக்கான ஒரு குட்டி Sample ! :)

* முண்டா பணியன போட்டு, அதை சட்டைக்குள்ள Tuck In பண்ணி விட்டு, தலை முடியை ஆட்டி ஆட்டி ” ஏய் ! டன்டநக்கா டனாக்குனக்கா னு ” இவரு ஆடுற ஆட்டத்தை பாக்க கண் கோடி வேண்டும்.

* இவரு இப்ப எந்த படமும் எடுக்காம இருக்குறததே கலைத்தாய்க்கு செய்யுற ஒரு பெரிய கலை சேவைதாங்க… :)

தமிழ்த் திரை இன்னும் கிழியும்…..

தொடரும்..  :)

17 முறை கேட்ட கேள்வி??


வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது!

70 வயதைக் கடந்த முதியவர் சிவசாமி சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து வெளியே போவோர் வருவோரை எல்லம் வேடிக்கை பார்த்தவாறு இருந்தார் . அவரது மனைவி கமலாம்மா அவரது தலைக்கு பின்னால் உட்கார்ந்து ராமாயணத்தை படித்துக் கொண்டிருந்தார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும்  அவர்களின் மகன் சரவணன் தனது மடிக்கணிணியில்(Laptop) ஏதோ மும்முரமாக‌  வேலை செய்துக் கொண்டிருந்தார்.

திடீரென ஒரு புறா முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.அதை கமலாம்மாவும் கவனிக்கத் தவறவில்லை.. புறாவைப் பார்த்து விட்டு மெதுவாக தன் தலையைத் திருப்பி தன் மனைவி கமலாவை ஒரு சிறு புன்சிரிப்போடு பார்த்தார் சிவசாமி ! பதிலுக்கு கமலாம்மாவும் சிரிக்க,மீண்டும் திரும்பி அந்த புறாவைப் பார்த்து

“என்ன இது?” என்று கேட்டார் .

மடிக்கணிணியிலிருந்து கண்களை வில‌க்கிய சரவணன் சொன்னார், “அது ஒரு புறா ”

சில நிமிடங்கள் கழிந்தன. சிவசாமி மீண்டும் கேட்டார், “என்ன இது?”

“இப்பத்தானே சொன்னேன், அது ஒரு புறா” என்றார் சரவணன்.

சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?”

சற்று எரிச்சலான குரலில் சரவணன் பதிலளித்தார், “அய்யோ அது ஒரு புறாப்பா, புறா புறா!”

இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது?

சரவணனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை தடவை தான் சொல்லித் தொலைக்குறது, ‘அது புறா என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா? வயசானாலும் ஆச்சு,உங்களுக்கு சுத்தமா காது கேக்கவே மாட்டேங்குது..வேலைக்காரனை கூட்டிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வாங்கனாலும் கேக்காம, ஏன் என் உசிரை வாங்குறீங்க‌”

முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, சிவசாமி முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை.

டேய் சரவணா!- கமலாம்மா!

என்னம்மா?உனக்கும் அது என்னனு தெரியனுமா?‍‍பொரிந்து தள்ளினார் சரவணன்.

” இந்தா இதைப்படி “!–ஒரு நாட்குறிப்பின் குறிப்பிட்ட பக்கத்தை காட்டி கொடுத்துவிட்டு சென்று அமர்ந்து கொண்டார் கமலாம்மா

அது  தந்தை சிவசாமியின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார்.

அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;

“எனது சின்னஞ்சிறு மகன்  சரவணன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு புறா வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன’ என்று 17  தடவைகள் கேட்டான். ‘அது ஒரு புறா’ என்று நான் 17  தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.


சரவணன் வேகமாக நிமிர்ந்து பார்த்தார், தந்தை சிவசாமியை காணவில்லை!

அம்மா, அப்பா எங்க?- த‌ழு தழுத்த‌ குரலில்,சரவணன்.


கமலாம்மா  எதுவும் பேசவில்லை!


வேகமாக வெளியே சென்று பார்த்தார் , கோலை ஊன்றி மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்த சிவசாமி தெரு முனையைத் தாண்டி இருந்தார்!

அவரது நாட்குறிப்பின் அந்த குறிப்பிட்ட பக்கம் சற்று ஈரமாகியிருந்ததுசரவணனின் கண்ணீர்த் துளிகளால் ! !..


நட்பே நட்பே!


உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

து‌ன்ப‌ம் வரு‌ம் வேளை‌யி‌ல் கடவுளை ‌நினை‌க்‌கிறோம். அடுத்ததாக உத‌வி கே‌ட்க ந‌ல்ல ந‌ண்ப‌ர்களை‌ப் ப‌ற்‌றிய எ‌ண்ண‌ம் ந‌ம்மையு‌ம் அ‌றியாம‌ல் ந‌ம் மன‌தி‌ல் உதயமா‌கிறது.. பர‌ஸ்பர‌ம் அ‌ன்பை ம‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் து‌ன்ப‌த்தையு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் இ‌ந்த ஆ‌ற்ற‌ல் ந‌ட்பு‌க்கு ம‌‌ட்டுமே உ‌ரிய ‌சி‌ற‌ப்பா‌கிறது.

ஒ‌‌‌‌வ்வொரு ம‌னிதரு‌க்கு‌ம் அவருடைய வா‌ழ்‌க்கை‌யி‌ல் ந‌ம்பகமான ஆலோசக‌ர் தேவை‌ப்படு‌கிறா‌ர். மு‌க்‌கியமாக ந‌ண்ப‌ர்க‌ள் தேவை‌ப்படு‌கிறா‌ர்க‌ள். ஒருவருடைய ‌சி‌ந்தனைகளையு‌ம், குண‌ங்களையு‌ம் ப‌ட்டை‌ ‌தீ‌ட்ட, உத‌வி செ‌ய்ய அவரை ந‌ன்கு உண‌ர்‌ந்த ஒரு ந‌ண்ப‌ர் தேவை‌ப்படு‌கிறா‌ர்.

இந்த நன்னாளில், என் உயிரினும் மேலான என் நண்பர்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


எனது இந்த 50வது பதிவு,

நண்பர்கள் தினத்தால் மேலும் சிறப்பான பதிவாக அமைந்ததில் மிகவும் மகிழ்ச்சி.


நண்பர்கள் தினத்தில் என்னை நான் மிகவும் ரசித்த ஒரு சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்..

“நண்பன் ஒருவன் வந்த பிறகு, விண்ணைத்தொடலாம் உண்டு சிறகு  வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே…”

“ஊர் கூடி வந்தாலும் எதிர்க்குமே, உன் விழி துடிக்கையில் துடிக்குமே! உன் சோகம் இறக்கி வைக்க இறைவன் அனுப்பி வைத்த தோள்கள் தோழமையில் இருக்குமே”…

“கல்லூரி என்ன கொடுத்தது? கண் மூடி நினைத்தால் புரியுது! வெறும் கல்வி மட்டும் அல்ல, கனவு மட்டும் அல்ல, கண்கள் கலங்க வைக்கும் உறவுகள்!”

“எத்தனையோ குறும்புகள் செய்தோம்!
எத்தனையோ கனவுகள் நெய்தோம்!
எத்தனையோ காயங்கள் கண்டோம் தோழனே!
எத்தனையோ சண்டைகள் போட்டோம், எத்தனையோ வம்புகள் செய்தோம், எத்தனையோ பாடங்கள் கற்றோம்.. அத்தனையும் எந்நாளும் நெஞ்சுக்குள்ளே என்றும் இருக்கும்……”

எல்லையில்லா நட்பை போற்றுங்கள்… நண்பர்கள் தினத்தை  மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள்..

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!



என்றும் நட்புடன்,
ஜோ. ராஜேஷ்

நன்றி..!நன்றி..!நன்றி..!




நன்றி! நன்றி! நன்றி!


பதிவுலகத்திற்க்கு அறிமுகம் ஆகி மூன்று மாதங்கள் மட்டுமே முழுதாக முடிந்துள்ள நிலையில், உலகின் 31 நாடுகளிலிருந்து எனது வலைப்பூவை பார்வையிட்டோரின் எண்ணிக்கை 5000+ஐ தாண்டியுள்ளது..

மகிழ்ச்சியான இந்த தருணத்தில்,எனது எழுததார்வத்தை ஊக்குவித்து என்னாலும் எழுத முடியும் என நம்பிக்கையூட்டி,என்னை நானே வார்த்தெடுக்க பெரிதும் உதவிய  எனது பள்ளியின்  தமிழாசிரியார் திரு. செந்தூரான் அவர்களுக்கும், பதிவுலக ஆர்வம் எனக்குள் துளிர் விட காரணமாக இருந்து, பதிவுகளை எழுதத் தொடங்கிய நேரத்தில் எனக்குள் ஏற்ப்பட்ட பல சந்தேகங்களை தீர்த்து வைத்து உதவிய எனது பதிவுலக ஆசான்.நண்பன்  பலராமனுக்கும் , எனது படைப்புகளின் நிறை, குறைகளை  சொல்லி என்னை மென்மேலும் ஊக்கப்படுத்தி வரும் எனது நண்பர்களுக்கும், பதிவுலகத் தோழர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.. :)

நன்றி நன்றி நன்றி… :)

ஆவி உலக அனுபவம்..!


ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர். இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர். இவர் ஆங்கிலத்தில் Death and After என்ற ஒரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். அதில் ஆவிகள் பற்றி பல சுவாரஸ்யமான சம்பவங்களைத் தெரிவித்திருக்கிறார்.


கிருஷ்ணய்யரின் மனைவி பெயர் சாரதா. அவர் இருதயக் கோளாறால் இறந்து விட்டார். இது கிருஷ்ண அய்யருக்கு மிகுந்த சோகத்தைத் தந்தது. 33 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இணை தன்னை விட்டுப் பிரிந்ததைப் பற்றி மிகவும் கவலை கொண்டார். மரணம் என்றால் என்ன, அதன் பின் மனிதர்களின் நிலை என்னவாகிறது என்பது பற்றியெல்லாம் ஆராய்ந்தார். ஆவிகளுடன் பேசும் முறைகள் பற்றியும் ஆய்வுகள் செய்தார். உலகெங்கும் பயணம் செய்து பல புகழ்பெற்ற மீடியம்களை சந்தித்தார். பல அதிசய அனுபவங்களை, தகவல்களைப் பெற்றார் என்றாலும் நேரடியாக அவரால் அவரது மனைவியின் ஆவியுடன் தொடர்பு கொள்ள இயலாமல் இருந்தது.


அவர் மனைவி சாரதாவின் ஆவி பிறர் கண்களுக்குத் தட்டுப்பட்டது. அவர்களோடு பேசியது. பல எதிர்கால தகவல்களைக் கூறி எச்சரிக்கை செய்தது. ஆனால் கிருஷ்ணய்யருக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணத்தை சாரதாவின் ஆவியிடம் ஒரு நண்பர் வினவிய போது, ‘அவர் என் பிரிவால் அடைந்திருக்கும் சோகமும், அதனால் ஏற்படும் துயரமுமே மிகப் பெரிய திரையாகச் சூழ்ந்து அவரை என்னோடு தொடர்பு கொள்ள இயலாமல் செய்திருக்கிறது. அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியாக வாழ முயல வேண்டும்’ என்று அறிவுறுத்தியது.



இதனை அறிந்த கிருஷ்ணய்யர் மிகவும் துயரம் கொண்டார். ஒருநாள் கிருஷ்ணய்யரின் இல்லத்திற்கு ஒரு சாது வந்தார். அவர் புராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். மட்டுமல்ல’ ஆவிகளுடன் பேசுவதிலும் பயிற்சி பெற்றவர். அவர் கிருஷ்ணய்யருக்கு ஆவிகளுடன் பேசுவதற்காக சில பயிற்சி முறைகளை சொல்லித் தந்தார். ஆனால் அய்யர் அப்போது உச்ச நீதிமன்றத்தில் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றி வந்ததால் மிகுந்த வேலைப்பளு இருந்தது. அதனால் அந்தப் பயிற்சிகளைச் செய்ய இயலவில்லை. இனி கிருஷ்ணய்யர் கூற்றாகவே வருவதைக் காண்போம்.

அந்தச் சாது என்னோடு சிலநாட்கள் தங்கினார். என்னை தனது சிஷ்யப் பொறுப்பிலிருந்து விடுவித்தார். ஒருநாள்… பௌர்ணமி… இரவு… அன்று அவர் தியானத்தில் அமர்ந்தார். பின் தான் தற்போது சாரதாவின் ஆவியுடன் தொடர்பு கொள்ளப் போவதாகத் தெரிவித்தார். நானும் அதற்குச் சம்மதித்தேன்.


மறுநாள் காலை எழுந்ததும் அந்தச் சாது என்னைச் சந்தித்தார். தனது தியானத்தில் என் மனைவியைக் கண்டதாகவும் (அவர் முன்னமேயே என் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்திருந்தார்), அவர் பத்மா, காந்தா என்னும் இரண்டு பெயர்களை மட்டும் கூறி விட்டு உடனடியாக மறைந்து விட்டதாகவும் சொன்னார். நான் அதிர்ச்சியுற்றேன். காரணம், இந்த முன்பின் தெரியாத சாதுவால் அந்தப் பெயர்களை கற்பனை செய்து கூடச் சொல்லியிருக்க முடியாது. ஏனென்றால் பத்மா என்பது மனைவியின் சகோதரி பெயர். காந்தா என்பது என் மனைவியின் சகோதரர் பெயர் (காந்தா என்றுதான் அவரை அனைவரும் அழைப்பார்கள்). ஆக, இவர் என் மனைவியைக் கண்டதாகச் சொல்வது உண்மைதான் என உணர்ந்தேன்.


சில நாட்கள் போயிற்று. மீண்டும் அவர் ஒரு நாள் தியானத்தில் அமர்ந்தார். மறுநாள் அவர் தியானத்தில் கண்டவற்றை என்னிடம் சொல்ல ஆரம்பித்தார். ”என் தியானத்தில் உன் மனைவியைக் கண்டேன். ’ நான் என் கணவரது வருகைக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குள் ஒருவேளை நான் மறுபிறவி எடுக்க வேண்டி வந்தாலும் வரலாம். அப்படி நான் மறுபிறவி எடுத்தால், சென்னையிலுள்ள டாக்டர் சந்தானம் – ஜெயா சந்தானம் தம்பதிகளுக்குக் குழந்தையாகப் பிறப்பேன்’ என்றாள் அவள்” என்றார் சாது.


நான் திகைத்துப் போய் நின்று விட்டேன், காரணம், சந்தானம் என்பது என் மனைவி சாரதாவின் இளைய சகோதரர் பெயர். அவர் சென்னயில் டாக்டராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி பெயர் ஜெயா. இதை அந்தச் சாது கற்பனை கூடப் பண்ணிச் சொல்லியிருக்க முடியாது. இந்த விஷயங்களை அவரிடம் சொல்வதற்கான ஆட்களும் அப்போது என் வீட்டில் இல்லை. இது உண்மைதான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?’ என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணய்யர்.


இதுமட்டுமல்ல; முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் போன்றவர்களும் ஆவி உலக ஆய்வில் நம்பிக்கை கொண்டதாகவும் அவர் அந்நூலில் தெரிவித்திருக்கிறார்.


அனுபவமே உண்மை ஆசான்!


எனக்கும் ஒரு சில அமானுஷ்ய அன்பவங்கள் நேர்ந்துள்ளன! :(

ஆனால் இன்று வரை  நான் அவற்றை நம்பவில்லை.. ;) அவை அனைத்தும் எனது கற்பனை என்றும் , ஒரு வித மாயத்தோற்றம் என்றும் நினைக்கிறேன்… சுவாரசியமான அந்த அனுபவங்களை வேறொரு பதிவில் எழுதுகிறேன்… :)



மதராசபட்டினம்-சரித்திரம்!


மதராசபட்டினம்- இந்த படத்தை பார்க்க கிளம்பிய போது, எனக்குள் பெரிதாக எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை, 1940களில் சென்னை எப்படி இருந்தது என்று காட்டப்போகிறார்கள் என்பதைத் தவிர…

1945லும் 2010லும் மாறி மாறி நடப்பது போன்ற திரைக்கதை…

படம் 2010ம் ஆண்டு லண்டனில் தொடங்குகிறது.. ஒரு வயதான வெள்ளைக்கார மூதாட்டியை காட்டுகிறார்கள்(படத்தின் கதாநாயகி).. அவருக்கு உடல் ரீதியாக ஒரு பிரச்சினை. மருத்துவக்குழு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்கிறார்கள். ஆனால் பாட்டியோ தான் இந்தியா சென்று ஒருவரை சந்திக்க வேண்டும் என ஆரியாவின் பழைய புகைப்படத்தை கையில் வைத்துக்கொடு வானத்தைப்பார்க்க , பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் இந்தியா கிளம்புகிறார்.

“இதெல்லாம் சாகப்போற வயசுல இந்தியாக்கு போய் என்ன பண்ணப்போகுதோ” என லொள்ளு பேசும் விமான அதிகாரியிடம், ” நான் வாழ்ந்த ஊரை பார்க்கப்போறேன்” என தமிழில் பேசி அசத்தும் போது அதிர்ச்சி அடைவது அதிகாரி மட்டுமல்ல… நாமும் தான்…

ஏதோ புதிதாக சொல்லப்போகிறார்கள் என படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே புரிந்து போனது…

65 ஆண்டுகளுக்கு முன் இந்தியா சுதந்திரம் அடையாமல் இருந்த போது மதராசபட்டினத்தின் கவர்நராக இருக்கும் ஒரு அதிகாரியின் மகளாக ஊர் சுற்றிப்பார்க்க வருகிறார் நாயகி.

கலை இயக்குநர் செல்வகுமார் என டைட்டிலில் போடுகிறார்கள்.. மனிதரைப் பார்த்தால் கைகளைப்பிடித்து கண்களில் ஒத்திக்கொள்ள வேண்டும்… 1940 களின் சென்னை’ யை கண் முன்னே அப்படியே நிறுத்திக்காட்டியிருக்கிறார் .ட்ராம் வண்டி, கூவம் படகுகள், அந்தக்கால கட்டிடங்கள், குதிரை வண்டிகள், பழைய மாடல் கார்கள் என ஒரு பீரியட் படத்துக்கே உரிய அத்தனை அம்சங்களும் கணகச்சிதமாய் மிளிர்க்கின்றன..

வெள்ளைக்கார அதிகாரியின் வண்டி ஒரு மேட்டில் இருந்து சரிந்து ஓடும் போது, “டேய் வண்டியைப்பிடி டா” என அதிகாரி ஆரியாவைப் பார்த்து சத்தம் போட, வேகமாய் ஓடி, காரைத் தாங்கிப் பிடித்து விட்டு, காருக்கு பின்னால் நிற்கும் கழுதையை தூக்கிவிட்டு,பின் காரை அப்படியே சரிய விட்டுச் செல்லும் ஆரியாவின் அறிமுக காட்சியே அசத்தல்…

ஏமீ ஜாக்சன்(Amy Jackson) படத்தின் கதாநாயகி. நாயுடு ஹால் பொம்மை போல இருக்கிறார். கொள்ளை அழகு.. நடிப்பிலும்  ” அட” போட வைக்கிறார்…

குஸ்தி பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் வீரர்கள் வெள்ளைக்கார காவலரின் மிரட்டலுக்கு பயந்து ஓட, நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் ஆரியாவின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “ஓடு டா” என சொல்ல, புஜங்கள் புடைக்க ஆரியா அசையாமல் நிற்கும் போது அரங்கமே கைதட்டல்களால் அதிர்கிறது  ..

ஆரியாவுக்கும், வெள்ளைக்கார காவல் அதிகாரிக்கும் இடையே வரும் ஒரு மோதல் காட்சியில், ஆரியாவின் முதல் அடி அந்த அதிகாரியின் மேல் விழும் போது “400 வருஷ்த்துக்கு அப்புறம் இப்ப தான் நாம அடிக்கிறோம்” எனபது போன்ற வசனங்கள் படத்தின் பலம்…ஒருத்தரை 35 கோடியில தொலைச்சிட்டு , 60 வருஷத்துக்கு அப்புறம் வந்து 115 கோடில தேடுறீங்க போன்ற  Logic வசனங்களும் பளிச்…

ஆரியாவைதலைகீழாக தொங்க விட்டு ஆங்கிலத்தில் திட்டிக்கொண்டே அடித்துவிட்டு ஆரியாவின் முகத்தின் முன்னே வந்து “you will not leave here alive,i promise you” என கர்ஜிக்கும் அதிகாரியிடம், ” ஒண்ணும் புரியல, போயா” என ஆரியா சொல்ல கைதட்டல்  காதைப்பிளக்கிறது..


இப்படி பல தருணங்களில் ஆரியாவைப் பார்க்கும் நாயகி.. ஆரியவை காதலிக்கத் தொடங்குகிறார்.. இவ்வளவு கண்ணியமான காதல் காட்சிகளை ” காதலுக்கு மரியாதை” படத்துக்கு பின் இப்போது தான் காண முடிகின்றது… :) அனைத்து காதல் காட்சிகளும் கவிதை பேசுகின்றன…

வெள்ளைக்காரர்களின் ஆட்சியின் போது, புரட்சியாளர்கள் எவ்வளவ்வு கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பதை அதன் வலி குறையாமல் பல இடங்களில் காட்டியிருக்கிறார் இயக்குநர்..

2010ல் நடப்பதாக வரும் பல காட்சிகளில் நகைச்சுவை இழையோடுகிறது.. படத்தின் பல இடங்களில் நமக்கு Titanic படத்தின் சாயல் சிறிது தெரிவதை உணராமல் இருக்க முடியவில்லை. ஆனால் கதைக்களம் வேறு என்பதால் நமது எண்ணங்கள் அங்கே பொய்யாக்கப்படுகின்றன…

சுமார் 65 ஆண்டுகளுக்குப்பின் தான் காதலித்த ஒரு வீரனைத்தேடி சென்னைக்கு வரும் கதாநாயகி அவரை சந்திததாரா?

காதலனை கண்டுபிடித்ாரா?

ஆரியா எந்த நிலைமையில் இருந்தார்?

தன்னிடம் இருந்த அந்த நினைவுப்பொருளை ஆரியாவிடம் ஒப்படைததாரா?

அவரை தேடி வந்த நாயகிக்கு என்ன நேர்ந்தது?

என்பது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் படத்தின் கடைசி 20 நிமிடங்களில் நமக்கு பதில் தருகிறார் இயக்குநர்…

படம் முழுவதும் கைதட்டல்களைப் பெற்ற இயக்குநர், கடைசி 20 நிமிடங்களில் நமது கண்ணீர்த்துளிகளை பெறவும் தவறவில்லை…

படம் முடிந்து கனத்த இதயத்தோடு அரங்கத்தை விட்டு வெளியே வந்தேன்… படத்தின் விளம்பர சுவரொட்டியைப்பார்த்தேன்?! இயக்கம்: விஜய் என்று இருந்தது….

பரவாயில்லை, அஜீத்தை வைத்து கிரீடம் என்னும் படத்தை எடுத்து தவறி கீலே விழுந்திருந்தாலும், விஜய் விதையாகவே விழுந்திருக்கிறார்..பொய் சொல்லப்போறோம் படத்தின் மூலம் தளிர்த்து, மதராசப்பட்டினத்தின் மூலம் ஆலவிருட்சமாய் வளர்ந்து நிற்கிறார்…

வாழ்த்துக்கள்…